செய்திகள்

திருப்பதியில் செம்மரம் வெட்டிய ஜவ்வாதுமலை வாலிபர் கைது

Published On 2019-02-26 06:11 GMT   |   Update On 2019-02-26 06:11 GMT
திருப்பதியில் செம்மரம் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன.

செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் என்பதால் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு திருப்பதி அடுத்த சந்திரகிரி பெருமாள்பல்லி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து அவர்கள் விட்டு சென்ற 14 செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த அண்ணாமலை (வயது 35) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் அவருடன் 14 பேர் வந்ததாகவும் தெரிவித்து உள்ளார். மோப்ப நாய் உதவியுடன் வனப்பகுதிக்குள் தப்பி சென்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News