செய்திகள்
தென்னந்தோப்பு பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை.

‘சின்னதம்பி’ யானையை மீண்டும் தடாகம் பகுதிக்கு கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை

Published On 2019-02-05 05:23 GMT   |   Update On 2019-02-05 05:23 GMT
‘சின்னதம்பி’ யானையை மீண்டும் தடாகம் பகுதிக்கு கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #ChinnaThambiElephant
உடுமலை:

கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.

மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது. வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் யானைக்கு மயக்கம் தெளிந்தது.

யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.

யானையின் இந்த திடீர் மாற்றம் குறித்து அறிந்த கால்நடை டாக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். காட்டுயானையை வேறு இடத்துக்கு மாற்றினால் ஆவேசமாக இருக்கும். சின்னதம்பி குழந்தைபோல் மாறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.

மாவட்ட வன அலுவலர் தீலிப், உடுமலை ரேஞ்சர் தனபால், அமராவதி ரேஞ்சர் முருகேசன், தலைமை வன அதிகாரி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சின்னதம்பிக்கு பிடித்த இடமான தடாகம் பகுதியிலேயே விட ஆலோசனை நடத்தினர்.

கும்கிகள் கரும்புடன் நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று 5-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது. அதன் போக்கிலேயே விட்டுபிடிக்க வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.

பொதுமக்கள் வாழைப்பழம், மக்காச்சோள கதிர்களை கொண்டு வந்து பார்த்து வருகிறார்கள். கொண்டு வந்த தின்பண்டங்களை வன ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சின்னதம்பிக்கு கொடுக்கிறார்கள். சின்னதம்பி ஆசை ஆசையாக வாங்கி உண்கிறது.

சின்னதம்பியை இன்னும் ஒருவாரம் இதே பகுதியில் வைத்து அதன் உடல் நலம் மற்றும் மன நிலை நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று வனத்துறை அதிகாரி கூறினர்.

சர்க்கரை ஆலையின் பின்புறம் சின்னதம்பி முகாமிட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி அது நடமாடும் பகுதியில் தேங்கிய கழிவு நீரை நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றியது. #ChinnaThambiElephant


Tags:    

Similar News