செய்திகள்

திருநின்றவூரில் குடிநீர் நிறுவனத்துக்கு எந்திரம் கொடுப்பதாக ரூ.7½ லட்சம் மோசடி - வாலிபர் கைது

Published On 2019-01-23 06:21 GMT   |   Update On 2019-01-23 06:21 GMT
திருநின்றவூரில் குடிநீர் நிறுவனத்துக்கு எந்திரம் கொடுப்பதாக ரூ.7½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 26-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவர் திருநின்றவூர் கொசுவம் பாளையத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் எந்திரம் வாங்குவதற்காக நூம்பல் சூசையா நகர் மகாத்மா காந்தி ரோட்டைச் சேர்ந்த பாலேஸ்வர் சிங் என்பவரை அணுகினார்.

அப்போது அவரிடம் எந்திரம் வாங்க இரண்டு தவணையாக ரூ. 7 லட்சத்து 50ஆயிரத்தையும் தயாளன் கொடுத்தார். இந்த நிலையில் எந்திரங்களை சப்ளை செய்யாமல் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து பாலேஸ்வர் சிங் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுகுறித்து தயாளன் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பாலேஸ்வர் சிங்கை கைது செய்தனர்.

கைதான பாலேஸ்வர் சிங் இதே போல் எம்.கே.பி. நகர், வடபழனி, போரூர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் எந்திரங்கள் சப்ளை செய்வதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News