அரும்பாக்கத்தில் கஞ்சா வியாபார மோதலில் ரவுடி கொல்லப்பட்டாரா? - போலீஸ் விசாரணை
போரூர்:
சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். ரவுடி. இவர் மீது சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று காலை குமரேசன் அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் குணசேகர் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொலை செய்யப்பட்ட குமரேசன் முதலில்ரவுடி ஒருவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அவரை பிரிந்த குமரேசன் தனியாக கஞ்சா விற்பனை செய்து வந்திருக்கிறார்.
இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் காரணமாக ரவுடியின் கூட்டாளியான ராஜேஷ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு குமரேசன் தரப்பினரால் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது குமரேசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக குமரேசன் நண்பர்கள் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.