செய்திகள்

அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை

Published On 2019-01-20 13:54 GMT   |   Update On 2019-01-20 13:54 GMT
அந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 40). இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்ஷாப் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

இவரது மனைவி பெயர் ஹேமலதா (21). நேற்று மாலை வேலை முடிந்து கைலாசம் தனது மனைவி ஹேமலதாவுடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அந்தியூர் அருகே காட்டூர் பக்கம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி வேமாக வந்து கைலாசத்தை வழி மறித்தார். திடீரென இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வழிமறித்த ஆசாமி திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் கைலாசத்தின் கழுத்தை அவரது மனைவி கண்முன்னால் அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைகண்டு மனைவி ஹேமலதா சத்தம்போடவே அவன் தப்பி ஓடிவிட்டான்.

ரத்த வெள்ளத்தில் துடித்த கைலாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைலாசத்தை கொலை செய்த ஆசாமி தலைமறைவாக உள்ளான். அவன் யார்? எதற்காக இந்த கொலையை செய்தான்? முன்பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கொலையை பற்றி துப்பு துலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

மனைவி கண் எதிரே கணவன் கொலை செய்யப்பட்டாலும் மனைவி ஹேமலதாவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

மேலும் கொலைகாரன் பற்றியும் இந்த கொலைக்கு காரணம் எதுவும் உண்டா? என்று மனைவியிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இன்று காலை நடந்த தொடர் விசாரணை மூலம் கைலாசம் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைலாசம் மனைவி ஹேமலதாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்தான இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News