செய்திகள்

கொரடாச்சேரி அருகே பொங்கல் சீர்வரிசையை கணவர் ஏற்காததால் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-01-17 12:38 GMT   |   Update On 2019-01-17 12:38 GMT
கொரடாச்சேரி அருகே தாய் வீட்டு பொங்கல் சீர்வரிசையை கணவர் ஏற்காததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரியை அடுத்த செட்டி சிமிலியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 26). சமையல் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (21). இவர்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. குழந்தை இல்லை.

இந்த நிலையில் காமராஜ் பெற்றோர்களுக்கும், கவுசல்யா பெற்றோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கவுசல்யாவின் தாய் ஜெயந்தி சீர்வரிசை பொருட்களை வாங்கி சென்று மகளிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த காமராஜ் மனைவியின் தாய் வழங்கிய சீர்வரிசை பொருட்களை வேண்டாம் என்று பிடிவாதம் செய்து அந்த பொருட்களை எடுத்து சென்று அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டார். இது கவுசல்யாவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. தாய்வீட்டு சீர்வரிசையை கணவர் வாங்க மறுத்துவிட்டாரே என்று மனமுடைந்தார். 

இதைத்தொடர்ந்து அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஜெயந்தி கொராடச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 1 1/2 ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் இது தொடர்பாக திருவாரூர் ஆர்.டி.ஓ. முருகதாசும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News