தாடிக்கொம்பு பகுதியில் இலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தாடிக்கொம்பு:
தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு மாற்றாக பயன்படுத்தும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்திலும் தற்போது வாழை இலை முக்கிய இடம் பிடித்து வருகிறது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அகரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்து திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் வாழை இலை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது உள்ளூர் தேவைக்கே வாழை இலை போத வில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாழை இலை ரூ.10 வரை விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக வாழை தோட்டத்துக்கே வந்து இலைகளை வாங்கிச் செல்கின்றனர். தமிழக அரசு விதித்த பிளாஸ்டிக் தடையால் தங்கள் வாழ்வில் ஒளி பிறந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் வாழை இலைக்கு புத்துயிர் கிடைத்துள்ளதால் மேலும் பல விவசாயிகள் வாழைசாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.