செய்திகள்

அன்பழகன் பிறந்தநாளில் நிவாரண முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவி வழங்குங்கள்- முக ஸ்டாலின்

Published On 2018-12-14 09:18 GMT   |   Update On 2018-12-14 09:18 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பழகன் பிறந்தநாளில் நிவாரண முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #KAnbazhagan
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வின் கொள்கைப் பேராசான் இனமானப் பேராசிரியர் அன்பழகன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் தலைமையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே லட்சியம் என வாழ்பவர். கழகத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் பெருந்தகைக்கு டிசம்பர் 19-ம் நாளன்று 97-வது பிறந்தநாள்.

கலைஞரைவிட வயதில் மூத்தவர். தந்தை பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கொள்கை வழி அண்ணனாக கலைஞருக்குத் துணை நின்று, இன்று உங்களில் ஒருவனான எனக்கு, தந்தை நிலையிலிருந்து வழிகாட்டி வருபவர். பேராசிரியர் தனது பிறந்தநாள் விழாக்களை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் முழுமையாகத் தவிர்த்திட விரும்புவதால், அதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கழகத்தின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.

கழகத்தினர் ஏற்கனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியர் பெருந்தகையின் பிறந்த நாளான டிசம்பர்-19 அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்திட வேண்டுமெனவும் நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பேராசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றும் மாணவர்களாக கழகத்தினர் செயல்பட்டு, அவர் நமக்கு கற்றுத்தந்த கொள்கை பாடங்களுக்கு சிறப்பு சேர்ப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KAnbazhagan
Tags:    

Similar News