செய்திகள்

திருச்சூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2018-11-30 12:18 GMT   |   Update On 2018-11-30 12:18 GMT
திருச்சூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ராமவர்மாபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் அகுள். இவரது மனைவி பிரிதா. இவர்களது மகன் அஜி கிருஷ்ணன் (வயது 7). இதே குடியிருப்பை சேர்ந்த போலீஸ்காரர் அருண். இவரது மகன் அபிமன்யூ (9). குடியிருப்பு வளாகம் பகுதியில் ஒரு குளம் உள்ளது.

நேற்று மாலை சிறுவர்கள் அங்குள்ள குளம் அருகே விளையாடினர். விளையாடி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினர். அஜி கிருஷ்ணன், அபிமன்யூ ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

சிலர் குளத்தை எட்டிப்பார்த்தபோது சிறுவர்கள் 2 பேரும் பிணமாக மிதந்தனர். தகவல் அறிந்ததும் திருச்சூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். பெற்றோர் சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். விளையாடியபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவர்கள் பலியானது தெரியவந்தது.

Tags:    

Similar News