செய்திகள்

சூலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி

Published On 2018-11-19 05:12 GMT   |   Update On 2018-11-19 05:12 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் அப்பநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (22), ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயபுரத்தை சேர்ந்த செல்லபாண்டியன் என்பவரது மகன் முத்து கார்த்திக் (24) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சித்தநாயக்கன்பாளையத்தில் இருந்து அப்பநாயக்கன்பட்டிக்கு சென்றார்.

மோட்டார் சைக்கிள் பல்லடம் ரோட்டில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த கோழி வேன் மீது மோதி விபத்தானது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் முத்து கார்த்திக் இறந்தார்.

உயிருக்கு போராடிய கார்த்திக்கு கோவை அரசு ஆஸ்பத்தியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News