செய்திகள்

ஒரத்தநாடு அருகே பிளஸ்- 2 மாணவி தற்கொலை முயற்சி

Published On 2018-11-09 17:22 GMT   |   Update On 2018-11-09 17:22 GMT
ஒரத்தநாடு அருகே இன்று மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து பிளஸ்- 2 மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந் தகுடி மேலையூர் கிராமம் சொக்கன்தொண்டார் காலனி பகுதியை சேர்ந்தவர் சவுந்திரன். இவரது மகள் சத்யா (வயது 16). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி சத்யா, சமீபத்தில் நடந்த தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சவுந்திரன், மகளை கண்டித்து பேசினார். இதில் சத்யா மனமுடைந்து வேதனையுடன் இருந்து வந்தார்.

இதையடுத்து இன்று காலை 7.30 மணியளவில் சத்யா, வீடு அருகே உள்ள 100 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறினார்.

பின்னர் தொட்டியின் உச்சிக்கு சென்ற அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். இதில் சத்யாவுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடி அலறினார். சத்யாவின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர். பிறகு அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ் - 2 மாணவி குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News