செய்திகள்
ஏரியில் இருந்து மீட்கப்பட்ட அனிதா உடல்.

வேலூரில் கள்ளக்காதல் தகராறில் நர்சு கடத்தி கொலை

Published On 2018-11-08 05:36 GMT   |   Update On 2018-11-08 05:36 GMT
வேலூரில் கள்ளக்காதல் தகராறில் நர்சு கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் கீழ்மொணவூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அனிதா, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் மாயமானார். இந்த நிலையில் நேற்று சதுப்பேரி ஏரியில் அனிதா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது முகத்தில் சிறு காயங்கள் இருந்தது. அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் அஜித்குமார் தனது மனைவியை கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்சு அனிதாவுக்கும் பைனான்சியர் அஜித்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்தனர். தீபாவளி அன்று அனிதா, அஜித்குமாருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்டுபிடித்த கதிரேசன் அனிதாவிடம் இருந்து செல்போனை பறித்தார். மேலும் அவரை கண்டித்துள்ளார்.

இதனால் தம்பதிகளிடையே கடும் தகராறு ஏற்பட்டது. அன்று மாலை கதிரேசன் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். கதிரேசன் வீட்டில் இல்லாததை அறிந்த அஜித்குமார் அனிதாவின் வீட்டுக்கு வந்தார். கணவருக்கு விவகாரம் தெரிந்து விட்டதால் கள்ளக்காதலை கைவிடுமாறு அனிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அஜித்குமார் அனிதாவை அடித்துள்ளார். பின்னர் அவரை ஏரிக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலன் அஜித்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலை குறித்த தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News