செய்திகள்

தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி

Published On 2018-10-30 08:09 GMT   |   Update On 2018-10-30 08:09 GMT
தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3‍ வயது பெண் குழந்தை பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி:

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகினர். இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது பெண் குழந்தை பலியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ள‌து. தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது 3 வயது பெண் குழந்தை சரண்யா.

நேற்று மாலை சரண்யா அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். காலையில் அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவளை அவரது பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த‌னர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

ஏற்கனவே நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சலுக்கு முள்ள‌க்காட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் சாந்தினி என்பவர் இறந்தார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 3‍ வயது பெண் குழந்தை பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News