செய்திகள்

காதலியை பார்க்க வந்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

Published On 2018-10-22 10:53 GMT   |   Update On 2018-10-22 10:53 GMT
பள்ளிப்பாளையம் அருகே காதலியை பார்க்க வந்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பெரும்பாறை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 27). மினி ஆட்டோ டிரைவர்.

இந்த நிலையில் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த பெண்களும், ஆண்களும் பள்ளிப்பாளையம், வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூல்மில்லுக்கு தினமும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் தறிப்பட்டறையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

மினி ஆட்டோவை ஓட்டுவதை விட்டு விட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மராஜ் வெப்படையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அதே ஆலையில் பணிபுரிந்து வந்த ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்துக்குமார்(36) என்பவருடைய மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

இது பற்றி முத்துக்குமாருக்கு தெரியவந்தது. மகளுக்கு 17 வயதே ஆவதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தர்மராஜை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த பெண், தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து விட்டதாகவும், தன்னை கண்டித்து அடிப்பதாகவும் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து காதலியை பார்ப்பதற்காக தர்மராஜ் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு ஈகாட்டூருக்கு சென்றார். அப்போது பெண்ணின் தந்தை முத்துக்குமார் வீட்டின் வாசல் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்ததார். இதனால் தர்மராஜ் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அங்கும், இங்குமாக சுற்றிச் சுற்றி வந்தார். ஆள் நடமாட்டத்தை உணர்ந்த முத்துக்குமார் கண்விழித்து பார்த்தபோது, தர்மராஜ் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. ஏன்? எதற்கு? இங்கு வந்தாய் என கேட்டபோது, முன்னுக்குப்பின் கூறினார்.

இதனால் முத்துக்குமாரும், உறவினர்களும் சேர்ந்து மரக்கட்டையால் தர்மராஜை தாக்கினர். கை, கால், இடுப்பு, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார், பெண்ணின் தந்தை முத்துக்குமார் மற்றும் உறவினர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News