செய்திகள்

திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதல்- 3 பேர் உடல்நசுங்கி பலி

Published On 2018-10-20 07:12 GMT   |   Update On 2018-10-20 07:12 GMT
திண்டிவனம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

திண்டிவனம்:

சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). இவர் சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

அந்த நிறுவனத்தில் ஜான்சாமுவேல் (29) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு இவர்கள் 2 பேரும் குடும்பத்துடன் ஊட்டி செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), 8 மாத பெண் குழந்தை நானி மற்றும் விஜயகுமாரின் அத்தை ராமலட்சுமி (45), ஜான்சாமுவேல், அவரது மனைவி வின்சி (24) ஆகிய 6 பேரும் சென்னையில் இருந்து ஒரு காரில் ஊட்டிக்கு புறப்பட்டனர்.

அங்கு அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னைக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த கார் இன்று அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர் பாராதவிதமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஜான்சாமுவேல், வின்சி, 8 மாத குழந்தை நானி, கார் டிரைவர் அருண் ஆகிய 4 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் நட ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News