திருக்கழுக்குன்றம் அருகே லாரி மோதி இன்ஸ்பெக்டர் பலி - உடல் உறுப்புகள் தானம்
மாமல்லபுரம்:
கல்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தவர் துரை (வயது 56). கடந்த 15-ந் தேதி இரவு அவர் பூஞ்சேரியில் ரோந்து பணியை முடித்துவிட்டு மறைமலை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருக்கழுக்குன்றம் அடுத்த குச்சிச்காடு பகுதியில் வந்த போது, எதிரே வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இன்ஸ்பெக்டர் துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது இதயம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், கிட்னி மலர் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.