செய்திகள்
விடுதலையான ஆயுள் தண்டனை கைதிகள்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மதுரை மத்திய சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை

Published On 2018-10-12 09:40 IST   |   Update On 2018-10-12 09:40:00 IST
மதுரை ஜெயிலில் இருந்து 11 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.
மதுரை:

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் பல்வேறு கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் இருந்து கைதிகள், பல்வேறு கட்டங்களாக நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் முருகன், கணேஷ்பாபு, கருப்பசாமி, பிரபு கண்ணன், ஆனந்தராஜ், ஆண்டிசாமி, சரவணன், ஜெயபால், ராஜா, ராஜசேகரன், பொன்வேல் ஆகிய 11 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்று சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

மதுரை ஜெயிலில் இருந்து இதுவரை 11 கட்டங்களாக 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News