செய்திகள்
பழவனக்குடி கிராமத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் மறியல் செய்த போது எடுத்த படம்.

திருவாரூர் அருகே கொட்டும் மழையில் 8 கிராம விவசாயிகள் மறியல்

Published On 2018-10-05 07:53 GMT   |   Update On 2018-10-05 07:53 GMT
வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க தவறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கொட்டும் மழையில் 8 கிராம விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே பழவனக்குடி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறாததே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் பழவனக்குடி, கொச்சக்குடி, மருத பட்டினம், அடிப்புளிச்சேரி, கூத்தம் பாடி, கேக்கரை உள்ளிட்ட 8 கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் தண்ணீரின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

எனவே வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க தவறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 8 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருவாரூர் -நாகப்பட்டினம் இடையே 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையிலும் விவசாயிகள் தண்ணீருக்காக மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News