செய்திகள்
ஆனந்த் கொலை செய்யப்பட்ட வீடு (உள்படம்- கொலை செய்யப்பட்ட ஆனந்த்)

திருப்பூரில் தொழில் அதிபர் கடத்தி கொலை -சாக்குமூட்டையில் பிணம் மீட்பு

Published On 2018-10-05 06:54 GMT   |   Update On 2018-10-05 06:54 GMT
திருப்பூரில் தொழில் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார். சாக்கு மூட்டையில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி மானூர் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மகன் ஆனந்த்(26). இவர்களுக்கு காங்கயம், குன்னம்பாளையம் பகுதிகளில் தேங்காய் எண்ணை மில் உள்ளது. குன்னம்பாளையத்தில் உள்ள எண்ணை மில்லை ஆனந்த் நிர்வகித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஆனந்த் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை திருமலைசாமி, ஆனந்தின் செல்போனை தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் என்று வந்தது. பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேடினர். ஆனாலும் ஆனந்த்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் திருமலைசாமி ஊத்துக்குளி போலீசில் இன்று காலை தனது மகன் ஆனந்த்தை காணவில்லை என்று புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தும், அதே பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரும் நண்பர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மானூர் பகுதியில் உள்ள பாலகுரு வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வரவே போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

அப்போது ஆனந்த்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் பணம் தர மறுத்ததால் கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஆனந்தின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தனது வீட்டின் ஒரு அறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சாக்கு மூட்டையில் இருந்து ஆனந்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு உதவிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News