செய்திகள்
டால்டன் செல்வ எட்வர்ட்- ஜெகதீஷ் ஷைனி

அஞ்சுகிராமம் அருகே பேராசிரியையை வெட்டி கொன்ற கணவர்

Published On 2018-10-05 06:47 GMT   |   Update On 2018-10-05 06:47 GMT
அஞ்சுகிராமம் அருகே குடும்ப தகராறில் கணவரால் வெட்டப்பட்ட பேராசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தைச் சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40). இவரது மனைவி ஜெகதீஷ் ஷைனி (33), இவர் குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரின் சகோதரி ஆவார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெகதீஷ் ஷைனி பால்குளத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்துவந்தார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த டால்டன் செல்வ எட்வர்ட், அவரது மனைவி ஜெகதீஷ் ஷைனியை சரமாரியாக வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெகதீஷ் ஷைனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நினைவு திரும்பாமலேயே இருந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான ஜெகதீஷ் ஷைனியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

ஏற்கனவே மனைவி ஜெகதீஷ் ஷைனியை வெட்டி விட்டு தப்பியோடிய கணவர் டால்டன் செல்வ எட்வர்ட் கர்நாடகா மாநிலத்தில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவன்-மனைவி இருவரும் பலியானதையடுத்து அவர்களது குழந்தைகள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
Tags:    

Similar News