செய்திகள்

ஆட்சி கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் தினகரன் பேசுகிறார் - அமைச்சர் துரைக்கண்ணு

Published On 2018-09-26 08:02 GMT   |   Update On 2018-09-26 08:02 GMT
ஆட்சி கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் தினகரன் பேசி வருகிறார் என்று வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார். #MinisterDuraikannu
தஞ்சாவூர்:

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு இந்தியா உதவி செய்தது என்று ராஜபக்சே வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரை போர் குற்றவாளி ஆக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தவர் ஜெயலலிதா. இதேபோல, போர் குற்றத்திற்கு துணைபோன தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரையும் போர் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான். மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல், விவசாயத்திற்காக பூச்சி மருந்து வழங்கியதில் ஊழல், மின்சாரம், நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள்

தி.மு.க.வினர். லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர். இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது.

வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்திலும் வளர்ச்சி. வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது தமிழக அரசு.

இந்த ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும், நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் தினகரன் பேசி வருகிறார். இந்த ஆட்சியை, கட்சியை எவராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார். #MinisterDuraikannu
Tags:    

Similar News