செய்திகள்

பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை

Published On 2018-09-23 17:05 GMT   |   Update On 2018-09-23 17:05 GMT
பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீட்டு வசதி வாரிய பகுதியையொட்டி ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அதன் அருகே புதரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று புதரில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

அந்த வாலிபர் பேண்டும், சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. போலீசார் அந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றினர். அதில், தியாகு, வல்லம்படுகை என்று இருந்தது.

யாரோ மர்ம மனிதர்கள் அவரை கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தண்டவாளம் அருகே வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிறார்கள். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News