செய்திகள்

கருணாநிதி உடல் அடக்கம் குறித்து அவதூறு பேச்சு: கடம்பூர் ராஜூவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்

Published On 2018-09-21 13:28 GMT   |   Update On 2018-09-21 13:28 GMT
கருணாநிதி உடல் அடக்கம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #ministerkadamburraju

முள்ளக்காடு:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காவலனாக, தமிழினத்தின் தலைவராக, தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, சுயமரியாதைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட மாபெரும் தலைவர் கலைஞர்.

தனது 95-வது வயதில் மரணமடைந்த தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கி நாங்கள் பிச்சை போட்டோம் என அநாகரீகமாக, அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தனது 14 வயதில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அன்று முதல் இறுதி மூச்சுவரை தமிழ் சமுதாயத்திற்காக வாழ்ந்தவர் தலைவர் கலைஞர். தனது 45- வது வயதில் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றவர். 13 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர். 5 முறை தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்று நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபாண்மை மக்களின் பாதுகாப்பிற்காக, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காக சமரசமில்லாமல் போராடி வெற்றி கண்டவர். நம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தவர்.

மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்ற மகத்தான கொள்கையை உருவாக்கியவர். மத்தியில் கூட்டணி ஆட்சியை உருவாக்கிய தளகர்த்தர்களில் முதன்மையானவர். கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதிகளை, பிரதமர்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

தேசம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாபெரும் தலைவருக்கு மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தது அ.தி.மு.க அரசு. சென்னை உயர் நீதிமன்றம் கலைஞரின் சிறப்பை அங்கீகரித்து மெரினாவில் இடம் ஒதிக்கித்தர உத்தரவை பிறப்பித்தது.

உண்மை இவ்வாறிருக்க, அரசியலும், வரலாறும் தெரியாமல் அமைச்சர் என்ற அந்தஸ்தை மறந்து அருகதையற்ற முறையில் பேசுவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ministerkadamburraju

Tags:    

Similar News