செய்திகள்

சேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

Published On 2018-09-08 05:22 GMT   |   Update On 2018-09-08 05:22 GMT
சேலத்தில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாசிநாயக்கன்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவரது மனைவி பிரேமா (22).

4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு அஜய் (3) என்ற மகன் இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கண்ணன் தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்த தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

இதனால் பிரேமா தனது மாமியார் மாரியம்மாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லிலும் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது 3 வயது மகன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த பிரேமாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர்.

தகவல் அறிந்த துணை கமி‌ஷனர் தங்கதுரை மற்றும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பிரேமாவின் தந்தை சின்னத்தம்பி, தாய் சின்ன பொண்ணு மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் கண்ணன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த தோட்டத்தின் உரிமையாளர் கொடுத்த ரூ.6 லட்சத்தை பிரேமாவும், அவரது மாமியார் மாரியம்மாளும் பிரித்து கொண்டனர்.

தற்போது பிரேமாவிடம் இருந்த பணத்தை கேட்டு மாரியம்மாள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதனால் தனது மகனை கொன்று பிரேமா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் புகார் கூறினார்.

இதையடுத்து மாமியார் மாரியம்மாள் மற்றும் உறவினர்களிடம் இன்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணையில் பிரேமா கணவர் இறந்த சோகத்தில் மகனை கொன்று தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News