செய்திகள்
வி‌ஷம் கலந்த மதுகுடித்து இறந்த கிருஷ்ணராஜ், மகேஸ்.

பண்ருட்டி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கொலை

Published On 2018-08-21 12:44 IST   |   Update On 2018-08-21 12:44:00 IST
பண்ருட்டி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகிமைதாஸ்(வயது 52). இவர் பண்ருட்டி வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். இவரது மகன் மகேஸ்(33). லாரி டிரைவர்.

அதேபகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற கிருஷ்ணராஜ்(40). இவரும் லாரி டிரைவர். மகேசும், கிருஷ்ணராஜிம் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் மகேஷ் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின்னர் அவரும் கிருஷ்ணராஜிம் அங்குள்ள கறிக்கடை முன்பு அமர்ந்து மது குடித்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் மதுகுடித்த மகேசுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ் பரிதாபமாக இறந்தார்.

அதேபோல் வீட்டுக்கு சென்ற கிருஷ்ணராஜிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே கிருஷ்ணராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் குடித்த மதுவில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. மகேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மதுவில் யாரோ? வி‌ஷம் கலந்துள்ளது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து மகேஷ் உறவினர்கள் மற்றும் கிருஷ்ண ராஜ் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மகேசுக்கு கலையரசி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதேபோல் கிருஷ்ண ராஜிக்கு கயல்(30). என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News