செய்திகள்

சிவகிரியில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை - வாலிபர் கைது

Published On 2018-08-19 04:48 GMT   |   Update On 2018-08-19 04:49 GMT
சிவகிரியில் ஆட்டோ டிரைவர் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி:

நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது35), ஆட்டோ டிரைவர். இவர் அப்பகுதியில் ஆட்டோ சங்க செயலாளராகவும் இருந்தார். இவருடன் அதே பகுதி 1-ம் திருவிழா மண்டகப்படி தெருவை சேர்ந்த பொன்மாரி என்ப வரும் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவர்களுக்கிடையே சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் முறை வைத்து சவாரி சென்று வந்தனர். இந்த நிலையில் பொன்மாரி மட்டும் கட்டுப்பாட்டை மீறி முறைப்படி ஆட்டோ ஓட்டாமல் தனது இஷ்டம் போல் செயல்பட்டாராம்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு ராமசுப்பு சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தார். அப்போது இரவு 10 மணியை தாண்டி விட்டதால் அங்கு வந்த பொன்மாரி, ராமசுப்புவிடம் தகராறு செய்தார். தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த பொன்மாரி, ராமசுப்புவை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதில் அவருக்கு கழுத்து, கை, மார்பு பகுதியில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிவகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ராமசுப்புவை கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்து பொன்மாரியை கைது செய்தனர். இதனிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமசுப்புவின் உடல்நிலை மோச மடைந்து நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பொன்மாரி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராமசுப்புவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமசுப்புவுக்கு திருமணமாகி மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News