செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2018-08-16 09:36 IST   |   Update On 2018-08-16 09:36:00 IST
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் இன்றும் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். #kumbakaraifalls
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரைஅருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் பொழுது கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களும் கும்பக்கரை அருவியில் நீராடிச்செல்கின்றனர்.

நேற்று காலை முதல் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு செந்நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க, சுற்றிப்பார்க்க வனத்துறையினர் காலவரையற்ற தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வரத்து சீராகும் போது சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேகமலை, தூதுவானம் பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் சுருளிஅருவியிலும் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் இன்றும் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். #kumbakaraifalls


Tags:    

Similar News