செய்திகள்

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல்- சென்னை ரெயில்கள் தாமதம்

Published On 2018-08-06 06:33 GMT   |   Update On 2018-08-06 06:33 GMT
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னைக்கு வரும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் - காட்டாங்கொளத்தூர் இடையே உள்ள தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5.40 மணியளவில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் சென்றது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் இதுபற்றி செங்கல்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதே போல செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டது.

ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர். காலை 6 மணிக்கு பின்னர் ரெயில் போக்குவரத்து சீரானது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலில் சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
Tags:    

Similar News