செய்திகள்
ஒரு நாடு ஒரே தேர்தல் - அதிமுக எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?
பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தற்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
சென்னை:
பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்ட ஆணையத்திற்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
நிலையான ஆட்சியை தரவேண்டும் என்பதற்காக 2016-ல் அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் 2021-ல் நிறைவடைகிறது. தேர்தல் சமயத்தில் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும், இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைப்பதால் மக்கள் விரும்பிய நிலையான ஆட்சி பாதிக்கப்படும். ஒரே சமயத்தில் தேர்தல் என்ற திட்டத்தால் தமிழக சட்டசபையின் ஆயுட்காலத்தை குறைக்க கூடாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சட்ட ஆணையத்தின் பரிந்துரைப்படி எடுத்துக்கொண்டால், அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 2021 வரை சட்டமன்ற பதவிக்காலம் கொண்ட மாநிலங்களுக்கும் சேர்ந்து தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#OneNationOneElection