செய்திகள்

தாராபுரம் அருகே விபத்து - நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி

Published On 2018-07-02 05:21 GMT   |   Update On 2018-07-02 05:21 GMT
தாராபுரம் அருகே வேன் நடுரோட்டில் கவிழ்ந்து 2 பெண்கள் பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்தனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது.

இந்த கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, கோம்பயம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

அவர்கள் தினமும் காலையில் வேனில் வேலைக்கு வருவது வழக்கம். அது போல் இன்று காலை ஒரு வேனில் ஆண்கள், பெண்கள் என 23 பேர் வேலைக்கு வந்தனர்.

இந்த வேன் தாராபுரம்- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு கல் மீது ஏறி வேனின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

அவர்களில் கோம்பயம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி (50), புளியம்பட்டி குமரன் மனைவி பார்வதி (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

வேனில் இருந்த 21 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Tags:    

Similar News