செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் - அவ்வையார் விருது பெற்ற சின்னப்பிள்ளை பேட்டி

Published On 2018-06-21 14:56 IST   |   Update On 2018-06-21 14:56:00 IST
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று அவ்வையார் விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்தார். #chinnapillai
மதுரை:

கிராமப்புற பெண்களை மேம்படுத்துதல் மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவர் சின்னப்பிள்ளை(வயது66). முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவரது காலைத் தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகே உள்ள பில்லுசேரியைச் சேர்ந்த இவர், சமீபத்தில், தமிழக அரசின் அவ்வையார் விருதினை, முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் இருந்து பெற்றார்.

விருதுபெற்று மதுரை வந்த சின்னப்பிள்ளை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களை மேம்படுத்தும் வகையில் 1990-ம் ஆண்டு 4 பெண்களை ஒருங்கிணைத்து களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கினேன். இன்று 16 மாநிலங்களில் 10 லட்சம் பெண்கள் எங்கள் குழுவில் உள்ளனர்.

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற பாடுபட்டதற்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சக்தி புரஸ்கார் விருது வழங்கியது எனது பணிக்கு உற்சாகம் அளித்தது. அந்த விருது எனக்கு மட்டுமல்ல 10 லட்சம் பெண்களுக்கும் உத்வேகத்தை அளித்தது.

தமிழகத்தில் இன்று மது குடித்து நிறைய பேர் இறந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



அப்போது நிருபர்கள், அவ்வையார் விருது பெறும்போது முதல்வரை சந்தித்த நீங்கள், இதனை அவரிடம் தெரிவித்திருக்கலாமே என கேட்டனர். விருது வழங்கும் விழாவில் நன்றி எனக்கூற மட்டுமே எனக்கு அறிவுறுத்தப்பட்டது. வேறு எதுவும் பேச அனுமதி இல்லை என்றார். #chinnapillai


Tags:    

Similar News