செய்திகள்

திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2018-06-09 09:45 IST   |   Update On 2018-06-09 10:41:00 IST
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.

மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News