செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 4 பேர் ஜெயிலில் திடீர் போராட்டம்

Published On 2018-06-08 10:16 GMT   |   Update On 2018-06-08 10:16 GMT
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 4 பேர் ஜெயிலில் திடீரென உணவு சாப்பிட மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் மத்திய ஜெயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் சங்ககிரியை சேர்ந்த தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வகுமார், குமார் என்கிற சிவக்குமார், கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 14 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் நீதிபதியை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதில் 12 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களது ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 12 பேரும் உடனடியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 4 பேர் திடீரென உணவு சாப்பிட மறுத்தனர். பின்னர் அதிகாரிகள் அவர்ளை சமாதானப்படுத்தி உணவு சாப்பிட செய்தனர். இதனால் சேலம் மத்திய ஜெயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News