செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமிக்க வேண்டும் - ராமதாஸ்

Published On 2018-06-02 13:03 IST   |   Update On 2018-06-02 13:03:00 IST
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #CauveryManagementBoard #CauveryWater

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அற்புதங்களையும் நிகழ்த்திவிடாது என்ற போதிலும், காவிரி நீர் குறித்த கோரிக்கைகளையும், புகார்களையும் தெரிவிக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் இது வரவேற்கத்தக்கது.

புதிய ஆணையத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை அதன் பணிகளைக் கவனிப்பதற்கான தற்காலிகத் தலைவராக மத்திய நீர்ப்பாசனத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


மேலோட்டமாக பார்க்கும் போது இது இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், ஆணையத்தின் அமைப்பையே மாற்றுவதற்கான தொடக்கப்புள்ளி தான் இது என்பது தான் உண்மையாகும்.

காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் ஒரு தலைவரையும், முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரையும் கொண்டிருக்கும். இவர்களில் 8 பேர் நீர்ப்பாசனத்துறை வல்லுனராகவும், ஒருவர் வேளாண்-பொருளாதார வல்லுனராகவும் இருப்பார்கள் என்பது தான் அந்த அமைப்பின் சிறப்பாகும்.

ஆனால், இப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள மேலாண்மை ஆணையம் ஒரே ஒரு நீர்ப்பாசன வல்லுனரையும், 8 நிர்வாக அதிகாரிகளையும் கொண்டிருக்கும். 8 நிர்வாக அதிகாரிகளில் குறைந்தது 5 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பர். இதன்மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முழுக்க, முழுக்க நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பால் மாநிலங்களின் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது.

அதுமட்டுமின்றி, நீர்ப்பகிர்வு சார்ந்த சிக்கல்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என்றாலும் கூட, அதன் தீர்ப்பை ஏதேனும் மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுபற்றி மத்திய அரசிடம் முறையிட்டு உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்தே காவிரி மேலாண்மை ஆணையம் பல் இல்லாத அமைப்பு என்பது தெளிவாகிவிட்டது. இனிவரும் காலங்களில் ஆணையம் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளாது.

அதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட்டாலும் கர்நாடகத்திற்கு எதிராக மத்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதால் காவிரிப் பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துள்ளது.

எனவே, காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமித்து அதை முழுக்க முழுக்க தொழில்நுட்ப அமைப்பாக மாற்ற வேண்டும்; காவிரி மேலாண்மை ஆணையம் அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மாநிலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஆணையத்திற்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryManagementBoard #CauveryWater

Tags:    

Similar News