கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை - 20 பேர் மீது வழக்குப்பதிவு
கடலூர்:
கடலூர் மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்கள் தனித்தனியாக பைபர் படகில் மீன்பிடித்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை கடலில் மீன்பிடித்த போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் அரிவாள், கடப்பாரை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் பகுதிக்கு நடந்து சென்ற போது போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தனர்.
ஆனால் அதையும் மீறி தேவனாம்பட்டினம் மீனவர்களில் சில பேர் சோனாங்குப்பத்துக்கு சென்று அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65), பாண்டியன்(58) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த ஏழாயி உள்பட 2 பெண்களை தடியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பஞ்சநாதன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த பாண்டியன் உள்பட 3 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கந்தன், சதீஷ், தன்ராஜ் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 13 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 2 மீனவ பகுதி மக்களிடம் வடக்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர், டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மோதல் சம்பவத்தால் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் தடுக்க இன்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார்கள் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் மோதலால் இன்று கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
மீனவர்கள் மோதலில் பலியான பஞ்சநாதன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சோனாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன் மற்றும் அ.தி.மு.க.வினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கொலை செய்தவர்களை கைது செய்தால் தான் உடலை அடக்கம் செய்வோம் என்று பஞ்சநாதனின் உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். #fishermenmurder