செய்திகள்
கைது செய்யப்பட்ட முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி - நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன்

பழனி கோவிலில் விடிய விடிய ஆய்வு - சிலை மோசடிக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது

Published On 2018-05-14 05:30 GMT   |   Update On 2018-05-14 05:30 GMT
பழனி கோவில் சிலை மோசடியில் உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:

பழனி கோவில் மூலவர் சன்னதியில் நவபாஷாண சிலை சேதம் அடந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணையை தொடங்கினார்.

கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் சுகிசிவம் உள்ளிட்ட சில குருக்களிடம் 2-ம் கட்ட விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன் மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. கருணாகரன் கொண்ட குழுவினர் 3-ம் கட்ட விசாரணையை தொடங்கினர்.

இவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல்துறை பேராசிரியர் முருகையா குழுவினரும் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து அதில் உள்ள உலோகங்களின் அளவுகளை மதிப்பீடு செய்தனர்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் மலைக்கோவில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலை, சின்னக்குமாரசாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, நவவீரர்கள், கன்னிமார்கள் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வாகனங்கள் வைப்பறையில் உள்ள உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

2 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 2004-ம் ஆண்டு பழனி கோவிலில் உதவி ஆணையராக பணிபுரிந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, அப்போதைய நகை மதிப்பீட்டாளரான தேவேந்திரன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்ட போது பழனி கோவிலில் புகழேந்தி உதவி ஆணையராகவும், தேவேந்திரன் நகை மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளனர். புகழேந்தி அதன் பிறகு திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தேவேந்திரன் சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர்கள் இருவரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டதில் சிலை மோசடி நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளோம். இது தொடர்பாக மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.



Tags:    

Similar News