செய்திகள்
திருமண வீட்டில் இன்று விசாரணை நடத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை படத்தில் காணலாம்.

தோவாளையில் 17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-05-12 09:59 GMT   |   Update On 2018-05-12 09:59 GMT
தோவாளையில் இன்று நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தத்தினர்.
ஆரல்வாய்மொழி:

தோவாளை பகுதியில் உள்ள ஒரு தம்பதியின் மகளுக்கு இன்று திருமணம் நடப்பதாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த திருமணத்தில் மணப்பெண்ணுக்கு 17 வயதே ஆவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பாஸ்கர் தலைமையில் தொண்டர்கள் திருமண வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை நிறுத்தும்படி கூறினர்.

இதற்கிடையே இந்த தகவல் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மெர்சிரமணி பாய், கிரிஜா மற்றும் சமூக நலத்துறை அதிகாரி பியூலா, குழந்தைகள் நல அலுவலர் பெமிலா ஆகியோர் தோவாளையில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் மணப்பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

இதில் மணப்பெண்ணுக்கு திருமண வயது ஆகவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தியதோடு, திருமணத்தை நிறுத்துமாறு கூறினர்.

அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று திருமணத்தை நிறுத்துவதாக மணப்பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் மணமகன் யார்? என்பது பற்றிய விபரத்தை கேட்டறிந்த அதிகாரிகள் அவரிடமும் விசாரணை நடத்த மணமகனின் வீட்டிற்கு சென்றனர்.

இதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் மணப்பெண்ணின் பெற்றோரையும் அவர்களுடன் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News