செய்திகள்

சசிகலாவுக்கு, செங்கோட்டையன் துரோகம் செய்து விட்டார்- செந்தில்பாலாஜி

Published On 2018-04-18 09:47 IST   |   Update On 2018-04-18 09:47:00 IST
அமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கு, செங்கோட்டையன் துரோகம் செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் ஓடாநிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் நடந்த தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் நாளை( இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆனால் எங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனினும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்.

ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்வார்.

வீரத்துக்கு பெயர் பெற்ற தீரன் சின்னமலை மண்ணுக்கு சொந்தமான ஒருவருக்கு (அமைச்சர் செங்கோட்டையன்) சின்னம்மா சசிகலாவும், தினகரனும் முக்கிய அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டார்.

துரோகம் செய்த அவரை வாக்காளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

Similar News