செய்திகள்

கடல் கடந்து மலர்ந்த காதல் - கட்டிட தொழிலாளியை மணந்த கம்போடியா பெண்

Published On 2018-04-13 15:42 IST   |   Update On 2018-04-13 15:42:00 IST
சிங்கப்பூரில் பணிபுரியும் இடத்தில் கம்போடியா நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபனுக்கு ஏற்பட்ட காதலால், பெற்றோர் சம்மதத்துடன் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் பார்த்திபன் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலைக்கு சென்றார். இவர் பணிபுரிந்த இடத்தின் அருகே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கம்போடியா நாட்டைச் சேர்ந்த தென்மாவோ (30) வேலை பார்த்து வந்தார்.

இருவரும் நட்பு ரீதியாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பார்த்திபன் நத்தம் வந்தார்.

தனது காதல் குறித்து பார்த்திபன் பெற்றோரிடம் கூறினார். ஆரம்பத்தில் தயங்கிய பெற்றோர் பின்னர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஒத்துக் கொண்டனர். இதனையடுத்து தென்மாவோவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமணத்தை சொந்த கிராமமான பூசாரிப்பட்டியில் நடத்த முடிவு செய்தனர்.

தென்மாவோ, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பூசாரிப்பட்டிக்கு வந்தனர். கிராம மக்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. தங்களது கிராமத்துக்கு வந்த வெளிநாட்டு மருமகளை பூசாரிப்பட்டி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மணமக்களை வாழ்த்தினர்.

Similar News