செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் - சி.ஆர்.பி.எப். வீரர் கைது

Published On 2018-03-20 17:17 GMT   |   Update On 2018-03-20 17:17 GMT
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக, சி.ஆர்.பி.எப். வீரர் செந்தில்குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழு உருவச் சிலை கடந்த 25-4-2013 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

நேற்றிரவு சில மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்தனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. இன்று காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அரசின் உத்தரவுப்படி உடைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் உடனடியாக சீரமைத்து பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆலங்குடி அருகில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக சி ஆர் பி எப் வீரர் செந்தில் குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலை செய்து வருவதும், குடிபோதையில் சிலையை உடைப்பில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News