செய்திகள்

புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தாயை கொடூரமாக கொன்ற மகன்

Published On 2018-03-18 17:03 IST   |   Update On 2018-03-18 17:03:00 IST
புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் தாயை கொன்ற மகன், துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மறவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ராணி(வயது 50). இவரது மகன் ஆனந்த்(23), கட்டிட தொழிலாளி.

இந்தநிலையில் ஆனந்த் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தை, அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தாய் என்றும் பாராமல் ராணியை சரமாரி அரிவாளால் வெட்டினார். மேலும் ஆத்திரம் தீராத அவர், ராணியின் தலையை தனியாக துண்டித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து துண்டித்த தாயின் தலையுடன் கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆனந்த் சரணடைந்தார். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News