செய்திகள்

வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீனவர்களின் வலைகளை அறுத்து வீசியெறிந்த இலங்கை கடற்படையினர்

Published On 2018-02-06 12:06 IST   |   Update On 2018-02-06 12:06:00 IST
வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து வீசியெறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மயில்வாகனன். இவருக்கு சொந்தமான பெரிய விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த குமரமுத்து (வயது 30), கோபால் (45), ரஞ்சித் (26), சுப்பிரமணியன் (45), சிவக்குமார் ஆகிய 5 பேர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே உள்ள கடலுக்குள் விசைப்படகை நிறுத்தி நேற்று இரவு வலைகளை கடலில் வீசி உள்ளனர். அப்போது அந்த பகுதியில் இலங்கை மீனவர்கள் ஒரு சிறிய படகில் வந்தனர்.

இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் மீனவர்களின் விசை படகில் ஏறமுயன்றனர். இவர்கள் படகு பெரிய படகு என்பதால் இலங்கை மீனவர்களால் படகில் ஏற முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் மீனவர்கள் கடலில் வீசி இருந்த 300 கிலோ கொண்ட 6 கட்டு வலைகளை அவர்கள் அறுத்து வீசினர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குமரமுத்து உள்பட 5 பேரும் செல்போன் மூலமாக மயில்வாகனனுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் அறுத்து எறிந்த சம்பவம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 5 பேரும் கரை திரும்பிய பின்னர் தான் இது குறித்து விரிவான தகவல் கிடைக்கும். மேலும் இது குறித்து புகார் செய்யப்படும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். #tamilnews

Similar News