செய்திகள்

திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: முத்தரசன்

Published On 2018-01-16 15:40 IST   |   Update On 2018-01-16 15:40:00 IST
கடந்த 10 ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேட்டூர் அணை தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே மத்திய அரசுடன் தனக்குள்ள நெருக்கமான நல்லுறவை பயன்படுத்தி, தமிழக அரசு காவிரி பாசன விவசாயத்தை பாதுகாக்க கர்நாடகத்தில் இருந்து காவிரி தண்ணீரை பெற்று டெல்டா மக்களை பாதுகாக்க வேண்டும். கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட விவசாயக் கடன்கள் முழுமையையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

திருவாரூர்- காரைக்குடி, திருத்துறைப்பூண்டி- காரைக்குடி அகல ரெயில்பாதை கடந்த 10 ஆண்டுகாலமாக ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தங்களது தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை பட்டாசுத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இதனால் வேலை இழந்துள்ளனர். கஞ்சித் தொட்டிகள் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த பிரச்சனையில் தலையிடவில்லை என்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு பட்டாசு தொழிலுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து ஆற்றிய சொற்பொழிவு, தொடர்ந்து அது குறித்து வெளியிடப்பட்ட கட்டுரையும் ஆட்சேபனை தெரிவித்தனர். அதன்பிறகு அவர் பகிரங்க வருத்தத்தை தெரிவித்துவிட்டார். அதோடு அந்த பிரச்சனை முடிந்துபோன ஒன்றை பெரிது படுத்தி, அதை அரசியல் ஆக்க வேண்டும். அதனை மதமாக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வகுப்புவாத வெறியர்கள் தனிப்பட்ட முறையில் வைரமுத்துவை விமர்சிப்பதும், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதும் கண்டனத்துக்குரியது. வைரமுத்து தனிப்பட்ட நபர் என்ற கோணத்தில் அணுகுவார்களேயானால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News