செய்திகள்

அலங்காநல்லூரில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு நடைபெறும்: முதல்வர் அறிவிப்பு

Published On 2018-01-16 04:53 GMT   |   Update On 2018-01-16 04:53 GMT
மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதலாக ஒரு மணி நேரம் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். #Jallikattu #Alanganallur
மதுரை:

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். அத்துடன், தனி மேடையில் அமர்ந்து போட்டியை ரசித்தனர்.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வெளியேறும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் களமிறங்கி உள்ளனர். 1,241 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருப்பதால், அணி அணியாக களமிறக்கப்படுகின்றனர். 

போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சூழலைப் பொருத்து தேவைப்பட்டால் கூடுதல் நேரம் போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், போட்டியை கூடுதல் நேரம் நடத்த அனுமதிக்கும்படி முதலமைச்சருக்கு மாடுபிடி வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற முதலமைச்சர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு மைக் மூலம் வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டது. #Jallikattu #Alanganallur #tamilnews
Tags:    

Similar News