செய்திகள்

பண மதிப்பு நீக்க எதிர்ப்பு தினம்: காஞ்சீபுரத்தில், காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-08 06:56 GMT   |   Update On 2017-11-08 06:56 GMT
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை எதிர்த்து காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் காஞ்சி.ஜீவீ.மதியழகன் தலைமையில் காந்தி ரோடு பெரியார் நினைவுத்தூண் அருகே மத்திய அரசினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் பிரபாகரன், இராம.நீராளன், சேரன், நாதன், கருணாமூர்த்தி, சுகுமாரன், சங்கரலிங்கம், வீரபத்திரன் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினை எதிர்த்து காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தி பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் பெரிய காஞ்சீபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பிரச்சார ஊர்வலம் தொடங்கியது. நான்கு ராஜ வீதிகள் மற்றும் காஞ்சீபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க. அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர். மாவட்ட பொது செயலாளர் லோகநாதன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, வட்டாரத் தலைவர் அவளுர் சீனிவாசன், நிர்வாகிகள் தணிகாசலம், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அளித்த பேட்டிகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தினை முன்னாள் சேர்மனும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான பரந்தூர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகி அளவூர் நாகராஜன் வெளியிட்டார்.

புத்தகங்கள் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பச்சையப்பன், முத்தியால்பேட்டை ராஜசேகர், கந்தவேல், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News