செய்திகள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள்.

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Published On 2017-10-26 11:07 IST   |   Update On 2017-10-26 11:07:00 IST
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை நகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதால் நாள்தோறும் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் 96 பயிற்சி டாக்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், உதவித்தொகையை உடனே வழங்ககோரியும் இன்று திடீர் என்று பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்தனர்.

Similar News