வெள்ளோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு சி.எஸ்.ஐ., காலனி பகுதியில் வசிப்பவர் விநாயகமூர்த்தி நெசவு தொழிலாளி. மனைவி பெயர் தங்கமணி.
இவரது 6 வயது மகள் பூஜா கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சலால் அவதிப்பட்டார். பூஜாவை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று இரவு பூஜாவுக்கு உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த பூஜாவிற்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிந்தது. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மகளின் சடலத்தை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இறந்த பூஜாவின் அண்ணன் விக்ரம் வயது (13). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று குணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளோடு பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதார துறையும், ஊராட்சி நிர்வாகமும் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.