செய்திகள்
கடலூரில் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

மெர்சல் படத்தில் டாக்டரை இழிவுபடுத்தும் காட்சியை நீக்க வேண்டும்: தமிழிசை சவுந்தர்ராஜன்

Published On 2017-10-20 13:39 IST   |   Update On 2017-10-20 13:39:00 IST
மெர்சல் படத்தில் டாக்டரை இழிவுபடுத்தும் காட்சியை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
கடலூர்:

தமிழக பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் கிருபாநிதி உடல்நிலை குறைவு காரணமாக கடலூரில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாக்டரை பற்றி தெரியாமல் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் காட்சி அமைந்துள்ளது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும். மருத்துவர்கள் குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்ல எண்ணத்துடனும், சமூக அக்கறையுடனும் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பற்றி ஒரு படத்தில் அவரை இழிவுபடுத்தியதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் அந்த காட்சியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கூறினால் கருத்து சுதந்திரம். அதுவே நாங்கள் கூறினால் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



Similar News