செய்திகள்

கடலூர் அருகே நீதிபதி வீட்டில் ரூ.1 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2017-10-16 05:35 GMT   |   Update On 2017-10-16 05:35 GMT
கடலூர் அருகே சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கடலூர்:

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் ரகுமான் (வயது 43). கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் அருகே உள்ள உண்ணாமலை செட்டி சாவடியில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. விடுமுறை நாட்களில் இங்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உண்ணாமலை செட்டி சாவடியில் உள்ள வீட்டுக்கு ரகுமான் வந்திருந்தார்.

பின்னர் வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ரகுமானின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்த நிலையில் இன்று காலை ரகுமான் தனது குடும்பத்துடன் உண்ணாமலை செட்டி சாவடிக்கு வந்தார்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ திறந்து கிடந்தது. மர்ம மனிதர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு ரகுமான் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அர்ஜுன் என்கிற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி விட்டு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். நீதிபதி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News