செய்திகள்

பள்ளிக்கரணையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2017-10-12 10:03 GMT   |   Update On 2017-10-12 10:03 GMT
பள்ளிக்கரணையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழிங்கநல்லூர்:

பள்ளிக்கரணை, ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி விஜய குமாரி (வயது 28). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாக விஜயகுமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஜயகுமாரிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும் போது,

சென்னை அரசு மருத்துவமனையில் விஜயகுமாரிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

பள்ளிக்கரணை பகுதியில் மாநகராட்சி இதுவரை எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜயகுமாரி உயிரிழப்பிற்கு பிறகு அப்பகுதி முழுவதும் நேற்றிரவு கிரிமிநாசினி பவுடரை தூவி சென்றனர். இதை முன்கூட்டியே செய்திருந்தார். உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என்று கண்ணீரோடு தெரிவித்தனர்.

பழனி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ஹரிவிஷ்ணு. (வயது 8). 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சிலநாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிவிஷ்ணு இன்று காலை இறந்தான்.

மன்னார்குடி நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகள் மதுமதி. தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் சி.ஏ. படித்து வருகிறார்.

கடந்த 8-ந்தேதி மதுமதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. மேல் சிசிச்சைக்காக அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலனின்றி இன்று காலை மதுமதி பரிதாபமாக இறந்தார்.

பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்சித்ரா, கலைவாணி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகளாக பணிபுரிந்து வந்தனர்.

இவர்களுக்கு கடந்த 6-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பண்ருட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஜெய்சித்ரா மற்றும் கலைவாணிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News